“புனித வெசாக் தினத்திலாவது ஆயுள்கால சிறைத்தண்டனை அரசியல் கைதியான சச்திதானந்தன் ஆனந்தசுதாகருக்கு பொதுமன்னிப்பளித்து அவரை ஜனாதிபதி விடுதலை செய்ய வேண்டும்.”
– இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடக செயலாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினரும் கட்சி மாநகர சபை குழுத் தலைவரும், மாநகர சபை ஸ்தாபனம் மற்றும் மனிதவள அபிவிருத்திகள் தொடர்பான நிலையியல் குழுத் தலைவருமான சி.பாஸ்கரா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது இரக்க நல்லெண்ணத்தையும் மதக் கோட்பாட்டு நற்சிந்தனையாளன் என்பதையும் காட்ட வேண்டிய மிக முக்கியமான நாள் வெசாக் திருநாள் ஆகும்.
ஆயுள்கால சிறைத் தண்டனை அரசியல் கைதியான சச்திதானந்தன் ஆனந்தசுதாகரின் மனைவி இறந்த பின்னர் அவரின் பிள்ளைகள் நிர்க்கதியாகியுள்ளனர். இந்த அவலநிலை இன,மத பேதமின்றி சகல இன மக்களாலும் பார்க்கப்பட்டுத் தாக்கத்தை உண்டு பண்ணியுள்ளது.
இவ்வேளையில் புத்தபகவானின் அருட் போதனைகளைக் கடைப்பிடிக்கும் இந்த நாட்டின் ஜனாதிபதி, புனித வெசாக் தினத்தில் அரசியல் கைதியான சச்திதானந்தன் ஆனந்தசுதாகருக்கு பொதுமன்னிப்பளித்து அவரை விடுதலைசெய்ய வேண்டும்.
இதன் ஊடாக புத்த பெருமானின் நற்சிந்தனைக்கு கட்டுப்பட்ட காருண்யமான மனிதநேய ஜனாதிபதி என நாட்டு மக்களுக்கும் உலகத்திற்கும் காட்டவேண்டிய இறுதித் தருணம் இதுவாகும்” – என்றுள்ளது.