முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையின் கீழ் புதிய அரசாங்கம் அமையும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கொழும்பு கொலன்னாவ பிரதேசத்தில் “சரியான வழி” எனும் பெயரின் கீழ் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே முன்னாள் பாதுகாப்பு செயலாளர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த அவர்,
“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாட்டிற்கான பல்வேறு சேவைகளையும் அபிவிருத்தித் திட்டங்களினையும் மேற்கொண்டதனை நாம் அனைவரும் அறிவோம்.
அவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் முயற்சியின் கீழ் உருவாக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை துறைமுகமும், மத்தள விமான நிலையமும் நாட்டிற்கு பெரும் சொத்துக்களாகும்.
எனினும் தற்போது அவை எமக்கு சொந்தமானது அல்ல. 2015இல் ஆட்சிபீடமேறிய புதிய அரசாங்கம் செய்த முதல் செயல் ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் மேற்கொண்ட அபிவிருத்தித் திட்டங்களை நிறுத்துவதாகும்.
தொடர்ந்து நாட்டிற்கு பிரதான இலாபம் பெறும் வழிமுறைகளான துறைமுகம் மற்றும் விமான நிலையத்தினை பாதுகாக்காது வேறு நாட்டினருக்கு விற்றுவிட்டனர்.
இந்த நிலையிலிருந்து நாட்டை பாதுகாக்க வேண்டுமெனில் மீண்டும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாட்டை கைப்பற்றி ராஜபக்ச நிர்வாகம் உருவாக வேண்டும்.” என்றார்.