எதிர்க்கட்சித் தலைவரும், கூட்டமைப்பின் தலை வருமான இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசியல் சாணக்கியப் போராட்டத்தை தோற்கடிக்கின்ற வகையில் பல காக்கை வன்னியர்கள் தோன்றிக் கொண்டிருக்கின்றார்கள்.
மக்களின் விடிவுக்காக சுய சிந்தையோடு சிந்திக்கின்ற பண்டார வன்னியர்களை அடையாளம் காணுங்கள். காக்கை வன்னியர்களை காலால் உதைத்துத் தள்ளுங்கள். நாங்கள் ஒற்றுமையுடன் பயணிக்கின்றபோதுதான் எங்களின் இழப்புக்கள் வலிகள் வடுக்களுக்கான விடிவைப் பெற்றுக்கொள்ள முடியும்.
மண்ணின் விடிவுக்காக தங்கள் உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் சாம்பல் மேட்டிலிருந்து நான் இதனைக் கூறுகின்றேன். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராசா தெரிவித்தார்.
முல்லைத்தீவு கற்சிலைமடுவில் மாவீரன் பண்டாரவன்னியனின் 215ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
மாவீரன் பண்டாரவன்னியனின் நாளில் தமிழன் தலைவணங்கான் என்ற செய்தியைப் பேரினவாத அரசியல்வாதிகளுக்கு தெரிவித்துக் கொள்கின்றேன்.
மாவீரன் பண்டாரவன்னியன் ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராக வாள் எடுத்து போராடியபோது கூலிப் படைகளாகவும் நவீன ஆயுதங்களுடன் இருந்தவர்கள் முல்லைக் கோட்டைக்குள் ஒளித்த வரலாற்றும் உண்டு. மாவீரன் பண்டாரவன்னியன் காக்கைவன்னியனால் காட்டிக்கொடுக்கப்பட்டான. இது முதலாவது சாபக்கேடு.
அதனைத் தொடர்ந்து தமிழினத்தின் விடிவுக்காக ஆயுதப்போராட்டம் பரிணமித்தது. பன்னாட்டுச் சமூகமே பயந்து நடுங்குகின்ற எங்கள் ஆயுதப் போராட்டமும் காக்கைவன்னியர்கள் போன்றவர்களாலேயே காட்டிக் கொடுக்கப்பட்டது.
இன்று எங்கள் சம்பந்தன் ஜயாவின் தலைமையில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற அரசியல் சாணக்கிய போராட்டத்தினையும் தோற்கடிக்கின்ற வகையில் பல காக்கைவன்னியர்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். நடப்பதை நடப்பதில்லை என்று கூறுவதும் இல்லாததை உள்ளது என்று கூறுவதுமாக பல காக்கைவன்னியர்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றார்கள் – என்றார்.