
முச்சக்கரவண்டி திருத்தும் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட முச்சக்கரவண்டியை எடுத்துச் சென்ற 4 இளைஞர்கள் அதனை விபத்தில் சிக்க வைத்து விட்டு தலைமறைவான சம்பவம் இன்று மட்டக்களப்பு முகத்துவாரத்தில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
காத்தான்குடியைச் சேர்ந்த முச்சக்கர வண்டிக் காரர் ஒருவர், தனது முச்சக்கர வண்டியை பழுதுபார்ப்பதற்காக முகத்துவாரத்தில் உள்ள முச்சக்கர வண்டி திருத்தும் நிலையத்துக்கு எடுத்து வந்துள்ளார்.
அப்பொழுது அங்கு வந்த நான்கு இளைஞர்கள், தங்களிடமுள்ள சாரதி அனுமதிப்பத்திரத்தைக் காண்பித்து உங்களது முச்சக்கரவண்டியை ஒரு அவசரமான வேலை முடித்துக் கொள்வதற்காக தந்துதவுங்கள் 5 நிமிடத்தில் திரும்பி வந்து விடுகிறோம் என்றுள்ளனர்.
இவர்களது நச்சரிப்புத் தாங்கமுடியாமல் இருந்த உரிமையாளர், வாகனம் திருத்தும் நிலையத்தில் இருந்தவர்களும், அந்த இளைஞர்கள் எங்களுக்குப் பரிச்சயமானவர்கள்தான் என்று கூறியதும், அந்த இளைஞர்களிடம் தனது முச்சக்கர வண்டியை ஒப்படைத்துள்ளார்.
5 நிமிடத்தில் திரும்பி வருவதாகக் கூறிய இளைஞர்கள் ஒரு மணித்தியாலம் கடந்தும் திரும்பி வரவில்லை.
இந்நிலையில், அந்த இளைஞர்கள் எடுத்துச் சென்ற முச்சக்கர வண்டி முகத்துவாரம் களப்புப் பகுதியில் குடைசாய்ந்து கிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
பொலிஸாருக்கு அறிவித்து விட்டு அவ்விடத்திற்கு விரைந்த போது, இளைஞர்கள் தப்பித் தலைமறைவாகியிருப்பதும், முச்சக்கர வண்டி களப்பு நீருக்குள் மூழ்கி இருப்பதும் தெரிய வந்துள்ளது.

களப்புக் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடித் தோணிக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. தெருவோரங்களில் உள்ள சிசிரீவி கமெராவின் உதவியுடன் இச்சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த இளைஞர்கள் மது போதையில் முச்சக்கரவண்டியைச் செலுத்திச் சென்றிருப்பதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.