மட்டக்களப்பு மாநகரசபையின் 01வது விசேட அமர்வு இன்றைய தினம் (10) மாநகர முதல்வர் தி.சரவணபவான் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது அமர்வு நடவடிக்கைகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் மாநகரசபை உறுப்பினர் வே.தவராஜா அவர்களால் எதிர்வரும் 18ம் திகதி தமிழின அழிப்பு நாளான முள்ளவாய்க்கால் நினைவு இருப்பதால் அன்றைய தினம் சபை அமர்வுகள் இல்லாமையாலும் இன்றைய தினம் அதற்காக மாநகரசபையினால் அஞ்சலி செலுத்துவதற்கு சபையிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது.
இதன் போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி, சுயேட்சைக்குழு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் இவ்விடயமானது மாநகரசபை நியதிச் சட்டத்திற்கு முரணான விடயம். கூட்ட நிகழ்ச்சி நிரலில் உள்வாங்கப்படாத விடயங்களை செயற்படுத்த முடியாது. அவ்வாறு செயற்படுத்துவதெனில் சபை அமர்வு விடயங்கள் முடிவடைந்தவுடன் இதற்கான அஞ்சலி செலுத்தும் விடயத்தை மேற்கொள்ளலாம் என்று தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து சபை நிகழ்ச்சி நிரலில் உள்ளவாறு சபை விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியதன் பின்னர் இவ் அஞ்சலி செலுத்தும் விடயத்தினை மேற்கொள்ள முடியும் என சபை முதல்வர் தெரிவித்தமைக்கமைவாக சபையின் ஏகமனதான அனுமதியுடன் சபை நடவடிக்கைகளின் இறுதியில் முள்ளவாய்க்கால் நினைவாக மூன்று நிமிடங்கள் அஞ்சலி செலுத்தப்பட்டது.