மாதா பிதா குரு தெய்வம் என்ற வரிசையில் ஒவ்வொரு பிள்ளையினதும் தாய் தந்தையருக்கு அடுத்து பிள்ளையின் வளர்ச்சியில் முக்கியமானவராக விளங்குபவர் ஆசிரியர் .சமூக முறைமையின் நேரடி பங்காளர்களாக விளங்கும் ஆசிரியர்கள் ஒரு மாணவனின் எதிர்காலத்தினை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக திகழ்கின்றார் .ஓர் நல்ல ஆசிரியர் கிடைத்து விட்டால் ஒவ்வொருமாணவனினதும் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை .
தமிழ் நாட்டின் ஓர் பாடசாலையில் ஆசிரியராக பணிபுரியும் பகவான் என்ற ஆசிரியர் பாடசாலை விட்டு பணி இடமாற்றத்தில் போக கூடாது என்று மாணவர்கள் கதறி அழுத சம்பவம் இடம்பெற்றுள்ளது .அந்த வியக்க வைக்கும் ஆசிரியரின் பெயர் பகவான் .
மாணவர்கள் தன் மீது கொண்டிருக்கும் அளவற்ற பாசத்திற்கான காரணம் குறித்து கருத்து தெரிவித்த ஆசிரியர் பகவான் , மாணவர்களிடம் நான் ஆசிரியராக ஒருபோதும் நடந்து கொண்டதில்லை. மாணவர்களுடைய எண்ணத்துக்கு ஏற்றாற்போல் பாடம் நடத்துவேன். போரடிக்கிறது என்று சொன்னால் அவர்களுக்குக் கதை சொல்வேன். யாரையும் நான் கண்டிக்க மாட்டேன். யாரையும் அடிக்கவும் மாட்டேன். மாணவர்களுடைய பிறந்தநாள் அல்லது உடல் நலம் சரியில்லாதபோது மாணவர்களுக்குத் தன்னுடைய சொந்த செலவிலேயே அனைத்து உதவிகளையும் செய்து தருவேன். அது தவிர மாணவர்களுக்கு எது தேவையாக இருந்தாலும் என்னிடம் கேட்பார்கள். நான் அவர்களுக்கு அதை வாங்கித் தருவேன்.
மாணவர்கள் அவர்களது வீட்டில் எனக்காகவே சமைத்து சாப்பாடு கொண்டு வருவார்கள். அது தவிர மாணவர்களின் வீட்டில் என்ன செய்தாலும் எனக்காகப் பெற்றோர்கள் கொடுத்து அனுப்புவார்கள். அந்தக் கிராமத்தில் உள்ள மாணவர்களின் ஒட்டுமொத்த குடும்பங்களிலும் நான் ஒரு குடும்ப உறுப்பினராக விளங்குகிறேன். ஒவ்வொரு குடும்பத்துக்கும் நான் ஒரு பிள்ளையாகவே இருக்கிறேன். நான் பள்ளியில் சேர்ந்த 2016-ம் ஆண்டு பவித்ரா என்ற மாணவி ஆங்கிலப் பாடத்தில் 94 மதிப்பெண் உட்பட மொத்தம் 482 மார்க் பெற்றார். மாணவர்களின் எதிர்காலத்தைக் கருதியே தான் பாடம் நடத்துகிறேன்.
தினமும் பிரார்த்தனைக் கூட்டத்தில் மாணவர்களுக்கு நீதிக் கதைகளையும் உண்மைச் சம்பவங்களையும் எடுத்துச் சொல்வேன், மாணவர்கள் தீய வழிக்குப் போகாத வகையில் அவர்களுக்கு அறிவுரை வழங்குவேன். இதனாலேயே மாணவர்களுக்கு என்மீது பாசமும் பற்றும் அதிகமாகின. அதனால்தான் எனக்கும் மாணவர்களை நிறைய பிடிக்கும். அவர்களும் என்னை ஓர் ஆசிரியராகப் பார்க்காமல் அண்ணன் தம்பியைப் போலவே பார்ப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார் .