பெனால்டி ஷூட்டில் கோட்டை விட்ட ரஷ்யா… குரோஷியா அரையிறுதிக்குத் தகுதி…!
பரபப்பாக நடந்து முடிந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் கடைசி காலிறுதிப் போட்டியில் குரோஷியா ரஷ்யாவை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றிருக்கிறது.
இன்று நடைபெற்ற இரண்டாவது காலிறுதிப் போட்டியில் ரஷ்யாவும், குரோஷியாவும் மோதிக்கொண்டன. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களமிறங்கிய ரஷ்யா தொடக்கம் முதலே அபாரமாக விளையாடியது. ஆட்டம் தொடங்கிய 31 வது நிமிடத்தில் ரஷ்யாவின் டேனிஸ் சேரிஷேவ் முதல் கோலடித்தார். பதிலுக்கு ஆக்ரோஷத்துடன் விளையாடிய குரோஷியாவின் ஆண்ட்ரேஜ் கிராமாரிக் 39 வது நிமிடத்தில் பதில் கோலடிக்க 1 – 1 என்று சமநிலை ஆகி பரபரப்பு தொற்றிக் கொண்டது.
இரண்டாவது பாதியில் 100 வது நிமிடத்தில் குரோஷியா அணியின் டோமாகோஜ் கோலடிக்க மைதானம் அமைதியாகியது. பதிலுக்கு ரஷ்யாவின் மரியோ பிகேரா பெர்னாண்டாஸ் 115 வது நிமிடத்தில் கோலடிக்க இரண்டு அணிகளும் 2 – 2 என்ற கோல் கணக்கில் சமநிலை ஆனது. இரண்டு அணிகளாலும் அதன் பிறகு கோலடிக்க முடியவில்லை. பிறகு நடைபெற்ற பெனால்டி ஷூட்டில் 4 -3 என்ற கணக்கில் ரஷ்யா பரிதாபமாகத் தோற்று வெளியேறியது. குரோஷியா நான்காவது அணியாக அரையிறுதி போட்டிக்குத் தகுதி பெற்றிருக்கிறது.