விஜயகலா மகேஸ்வரன் பதவியை இராஜினாமா செய்வது மட்டும் போதுமானதல்ல என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஞாயிறு பத்திரிகையொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து விலகியதன் மூலம் விஜயகலாவின் பாரதூரமான கூற்று குறித்த குற்றச் செயலிலிருந்து அவர் முழுமையாக விடுபட்டதாக அர்த்தப்படாது.
தற்போது அரசாங்கம் எதிர்க்கட்சியினருக்கு அமுல்படுத்தும் அதே சட்டத்தை விஜயகலாவிற்கு எதிராகவும் அமுல்படுத்த வேண்டும்.
அவ்வாறு நடவடிக்கை எடுக்கத் தவறினால் அதற்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் பொறுப்பு சொல்ல வேண்டும்.
பௌத்த தேரர் ஒருவரோ அல்லது முஸ்லிம் மதப் பெரியார் ஒருவரோ இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தால் அரச சார்பற்ற நிறுவனங்களும் ஏனைய தரப்பினரும் பாரிய போராட்டங்களை நடத்தியிரப்பார்கள். கோசங்களை எழுப்பியிருப்பார்கள்.
விஜயகலாவின் கூற்றினை சில்லறை நகைச்சுவையாக மாற்றிவிடாது பொறுப்புணர்ச்சியுடன் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடவடிக்கை எடுக்கப்படும் வரையில் எதிர்க்கட்சியாகிய நாம் அவதானத்துடன் கண்காணிப்போம் என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.