ஆயுதப் போராட்டத்திற்கு செல்லும் சிறுவன் குறித்த தீபச்செல்வனின் நடுகல் நாவல்!
ஆயுதப் போராட்டத்திற்கு செல்லும் சிறுவனை பிரதான பாத்திரமாகக் கொண்டு ஈழப்போரைப் பேசும் தனது நாவல் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் கவிஞர் தீபச்செல்வன். நடுகல் என்ற தலைப்பில் இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் மற்றும் வாழ்க்கை குறித்து கவனத்தை ஈர்க்கும் பல கவிதைகளை எழுதிய ஈழக் கவிஞர் தீபச்செல்வனின் நடுகல் நாவலின் முகப்புப் படம் பெரும் எதிர்பார்ப்பை தோற்றுவித்துள்ளது.
நாவலின் முகப்புப் படத்தை வெளியிட்டுள்ள தீபச்செல்வன், துப்பாக்கிகளும் பீரங்கிகளும் ஆக்கிரமிப்பாளர்களின் குரல்களும் மாத்திரம் எங்களை இனப்படுகொலை செய்யவில்லை. எங்களுக்கு எதிரான புனைவுகளும் எங்களை கொலை செய்தன. வன்புணர்ந்தன. எங்கள் குரல்களை நசுக்கின. நாம் எப்படி வாழ்ந்தோம்? எதை விரும்பினோம்? எவை எம் கனவுகள்? குழந்தைகளின் பார்வையில் போரையும் வழ்வையும் பேசும் இரு சிறுவர்களின் கதையே ‘நடுகல்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாவல் ஈழப் போரின் பின்னணியில் ஆயுதப் போராட்டத்திற்கு செல்லும் ஒரு சிறுவன் குறித்து மற்றொரு சிறுவனின் பார்வையில் எழுதப்பட்டுள்ளதாக நாவல் ஆசிரியர் தீபச்செல்வன் கூறுகிறார்.
தமிழகத்தின் முன்னணிப் பதிப்பகமான டிஸ்வரி புக் பேலஸ் வெளியீடாக மதுரை கண்காட்சியில் செப்டம்பர் மாதம் ‘நடுகல்’ நாவல் வெளிவருகிறது. இந்த நாவலுக்கான முகப்புப் பக்கத்தை தமிழகத்தை சேர்ந்த பிரபல ஓவியர் சந்தோஷ் நாரயணன் வடிவமைத்துள்ளார். போரின் பின்னர் கிளிநொச்சியில் இருந்து முதன் முதலாக வெளிவரும் நாவலாக நடுகல் நாவல் முக்கியத்துவம் பெறுகிறது.