பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் பொறுப்பேற்று ஒரு மாதகாலத்திற்குள் தமிழ் மக்கள் அச்சுறுத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்துள்ளார்.
பொது மக்கள் அச்சுறுத்தப்படும் சம்பவங்களை தடுக்க தமிழ் மக்கள் பிரதிநிதிகள் முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டார். வவுனியா தம்பனைச்சோலையில் இடம்பெற்ற முன்பள்ளி மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா இன்று இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், முல்லைத்தீவு ஒதியமலை பகுதியிலுள்ள மக்கள் விவசாய நிலங்களுக்கு இரவு நேரங்களில் காவல்காக்க செல்லும் போது சிவில் உடையில் வரும் நபர்களினால் அச்சுறுத்தப்படுவதாக தெரிவித்தார்.
இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளர் பொட்டு அம்மான் என அறியப்படும் சண்முகலிங்கம் சிவசங்கர் நோர்வேயில் தலைமறைவாக வாழ்வதாக மஹிந்த ராஜபக்சவின் விசுவாசியான கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
கருணாவின் இந்த புதிய கண்டுபிடிப்பினால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் லிங்கநாதன் கவலை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட கருத்தால் தமிழ் மக்களே ஸ்ரீலங்காவில் ஆயுத போராட்டத்தை ஆரம்பித்தாக சிங்கள மக்கள் தவறான கருத்தினை கொண்டிருப்பதாகவும் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்துள்ளார்.