கருணா, பிள்ளையான் குழு உறுப்பினர்களை தேடி தேடுதல் வேட்டை ! அதிரடிப்படை அதிரடி ! வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்
கிழக்கு மாகாணத்தை சேர்ந்த முன்னாள் கருணா குழு உறுப்பினர்கள் சிலர் கைது செய்யப்பட்டு கொழும்பிற்கு கொண்டு செல்லப்படிடுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொழும்பில் இருந்து வருகை தந்த பயங்கரவாத தடுப்பு பிரிவின் விசேட பொலீஸ் குழு ஒன்று கிழக்கில் ஆயுதக்குழுவா செயற்பட்ட கருணா குழுவின் முன்னாள் உறுப்பினர்கள் நான்கு பேரை கைது செய்து கொழும்பிற்கு கொண்டு சென்றுள்ளனர்.
இவர்களின் கைது குறித்த உத்தியோகவூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இன்நிலையில் மட்டக்களப்பில் வைத்து ஜனாதிபதியை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக நடத்தப்படும் விசாரணைகளின் படி இவர்கள் விசாரணைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என சில உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே கைது செய்யப்பட்டவர்களில் முன்னாள் கருணா குழுவின் முக்கியஸ்தராக செயற்பட்ட மகிலன் என்பவரும் உள்ளார்.
இவர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து கருணாவுடன் இணைந்து திருகோணமலையில் இருந்த கடற்படையினருடன் சேர்ந்தியங்கியவர் என கூறப்படுகிறது.
இதனிடையே கைது செய்யப்பட்டவர்களில் சிலர் பாதுகாப்பு அமைச்சில் இருந்து மாதாந்தம் சம்பளம் பெறும் முன்னாள் துணை இராணுவக் குழுவைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது .
தமிழிழ விடுதலைப்புலிகளில் இருந்து பிரிந்து கருணா, பிள்ளையான் குழுவுடன் இணைந்து செயல்பட்ட துணை இராணுவக் குழுவினரை புலனாய்வு நடவடிக்கைகளுக்காக இணைத்துக் கொண்ட அரசாங்கம் அவர்களுக்கு இன்று வரை சம்பளம் வழங்கி வருகின்றனர்.
இவ்வாறு சுமார் நூற்றுக் கணக்கானவர்கள் தற்போது வரை அரசாங்கத்திடம் சம்பளம் பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.
இவ்வாறு கிழக்கு மாகாணத்தில் இராணுவ துணைக் குழுக்களின் ஆதரவை சம்பளம் கொடுத்து பாதுகாப்பு தரப்பினர் பெற்றுக்கொண்டாலும் கிழக்கில் இன்று வரை கண்டுபிடிக்க முடியாத பல கொலைச்சம்பவங்கள் நடந்தேறியே உள்ளது.
2009 யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் கிழக்கில் சுட்டுக்கொல்லப்பட்ட மண்டூர் சமூக சேவை உத்தியோகத்தர் மதிதயானை படுகொலை செய்தவர்களை இன்றுவரை பாதுகாப்பு தரப்பினர் கைது செய்யவில்லை.
அதே போன்று மட்டக்களப்பு மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் விமல்ராஜ் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமானவர்களையும் இன்று வரை கைது செய்யவில்லை.
இதே போன்று கடைசியாக வவுணதீவில் வைத்து சுட்டு படுகொலை செய்யப்பட்ட இரண்டு பொலீசார் மீதான தாக்குதல் தாரிகளை இன்றுவரை கைது செய்ய முடியாது பாதுகாப்பு தரப்பினர் தடுமாறி வருகின்றனர்.
இன்நிலையிலேயே கிழக்கு மாகாணத்தில் உள்ள முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மற்றும் விடுதலைப்புலிகளில் இருந்து பிரிந்து கருணா பிள்ளையான் குழுவுடன் இணைந்து செயற்பட்டவர்களை பாதுகாப்பு தரப்பினர் தேடித் தேடி கைது செய்து வருகின்றனர்.
ஜனாதிபதியின் கொலை சதி!
இதே நேரம் கிழக்கு மாகாணத்தில் உள்ள சிலர் இன்னுமொரு பாரிய சம்பவம் ஒன்றின் விசாரணைகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரை கிழக்கில் வைத்து கொலை செய்ய, சதி செய்ததாக கூறப்படும் விவகாரத்தில் சந்தேக நபரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா அண்மையில் பல முக்கிய விடயங்களை வெளிப்படுத்தியிருந்தார்.
குறிப்பாக இந்த விவகாரத்தில் முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினரான புஷ்பராஜை கிழக்கில் வைத்து பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா தரப்பு சந்தித்ததாக கூறப்படும் நிலையில், அச்சந்திப்பு தொடர்பிலான தகவல்களை பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா தனது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்திருந்தார்.
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர அறிந்திருந்த நிலையிலேயே புஷ்பராஜை கிழக்கில் வைத்து நாலக சில்வா தரப்பு சந்தித்ததாகவும், கிழக்கில் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிடப்பட்ட சம்பவம் ஒன்று தொடர்பில் இடம்பெற்ற இரகசிய விசாரணை நடவடிக்கைகளின் ஒரு அங்கமாகவே அந்த சந்திப்பு இருந்ததாகவும் சிரேஷ்ட சட்டத்தரணி அஜித் பத்திரண சுட்டிக்காட்டினார்.
விசாரணைகளை தமது சேவை பெறுநரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவே முன்னெடுத்ததாகவும், அதன் அறிக்கையை அவர் பொலிஸ் மா அதிபரிடம் சமர்ப்பித்துள்ளதாகவும், அவ்வறிக்கை பிரகாரம் மேலதிக நடவடிக்கைகள் பல பொலிஸ் மா அதிபரால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது அவர் சுட்டிக்காட்டினார்.
அந்த சந்திப்பில் புஷ்பராஜுடன் பேசப்பட்ட விடயங்கள் என்ன என்பது தொடர்பில் அச்சந்திப்பின் முழுமையான ஒலி வடிவ பதிவை சி.ஐ.டி.யினரிடம் ஒப்படைத்துள்ளதாகவும், அதனால் புஷ்பராஜுடன் கலந்துரையாடியதை கொலை சதிக்கான ஆதாரமாக காட்டுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என சிரேஷ்ட சட்டத்தரணி அஜித் பத்திரண கூறினார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரை கிழக்கில் வைத்து கொலை செய்யவும் உதவி பொலிஸ் அத்தியட்சர் பிரசன்ன அல்விஸ்ஸை கொழும்பில் வைத்து கொலை செய்யவும் சதி செய்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் நடைபெறும் வழக்கு விசாரணைகளில் இவை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது போன்ற காரணங்களினால் மட்டக்களப்பு மாவட்டத்திற்குற்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் பயணம் பல தடவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதே நேரம் எதிர்வரும் 12 திகதி மட்டக்களப்பிற்கு மீண்டும் ஜனாதிபதி விஜயம் செய்ய உள்ளார்