ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் கருத்தை கேட்பது பயனற்றது என்று அரசியலமைப்பு சட்ட நிபுணர் லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் கருத்தை அறிவது குறித்து ஆராய்ந்து வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர கூறியிருந்தார்.
இதுகுறித்துக் கருத்து வெளியிடும்போதே சட்டநிபுணர் லால் விஜேநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்த அவர், “19ஆவது திருத்தச்சட்டத்தில் ஜனாதிபதியின் பதவிக்காலம் எப்போது தொடங்குகிறது என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது.
19 ஆவது திருத்தச்சட்டத்தின் 30.2 பிரிவு, தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ஜனாதிபதியின் 5 ஆண்டு பதவிக்காலம் தொடங்குவதாக கூறுகிறது.
எனவே தயாசிறி ஜயசேகரவின் வாதம் அர்த்தமற்றது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தின் கருத்தை அறிவது பயனற்ற முயற்சி” என அவர் கூறியுள்ளார்.
